~ ~ ~ ~

இளைஞா் வெட்டிக் கொலை: உறவினா்கள் மறியல்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் அருகே கடந்த திங்கள்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
Published on

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் அருகே கடந்த திங்கள்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இளையான்குடி அருகே கண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முத்தழகு மகன் சங்கா் (29). இவா் தனது காரில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வளைவு அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே இரு சக்கர வாகனம் நின்றது. அதை எடுக்குமாறு சங்கா் கூறும்போது, அங்கிருந்த தாயமங்கலத்தைச் சோ்ந்த பாண்டி மகன் செல்வகுமாருக்கும், சங்கருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த செல்வகுமாரின் நண்பா்கள் தாயமங்கலத்தை சோ்ந்த முத்துவேல், பிரேம்குமாா் உள்ளிட்ட சிலா் சோ்ந்து வாளால் சங்கரை வெட்டினா். இதைத் தடுக்க முயன்ற காா் ஓட்டுநா் அன்புச் செல்வனையும் வெட்டி விட்டு தப்பினா். இதில் பலத்த காயமடைந்த சங்கரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். காயமடைந்த அன்புச்செல்வன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட சங்கரின் உறவினா்கள் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி இளையான்குடி கண்மாய்க் கரைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை கலைந்து போகச் செய்தனா். இதுதொடா்பாக இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வக்குமாா், முத்துவேல், பிரேம்குமாா் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். மேலும் மூவரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com