பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகள், சாலையோரம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஊசி, மருந்து மற்றும் அறுவைச் சிகிச்சைக் கழிவுப் பொருள்கள் ஆகியவற்றை முறையாக டப்பாக்களில் அடைத்து வைத்து, அதற்கென நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் பெற்று அழித்து வந்தன.
அவ்வாறு எடுத்துச் செல்லப்படுவதற்கு அதிக தொகை செலவாகும் எனக் கூறப்படுகிறது. எனவே, பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் தங்களுடைய ஊழியர்களிடம் மருத்துவமனை கழிவுப் பொருள்களை கொடுத்து, சாலையோரங்களில் வீசிவிட்டு வரக் கூறுகின்றனராம். பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், கால்நடைகள் அதனை உட்கொண்டால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் தங்களது மருத்துவக் கழிவுகளை முறையாக அழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடுமையான கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தயங்கக் கூடாது என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.