தேனி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள 10 கல் குவாரிகளில் கல் உடைக்கும் உரிமம் பெறுவதற்கு புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், 9 குவாரிகளுக்கு குத்தகைதாரர்கள் யாரும் ஏலம் கோர முன்வரவில்லை.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை ஆண்டிபட்டி வட்டாரம் கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், போடி வட்டாரம் கோடங்கிபட்டி ஆகிய ஊர்களில் 10 இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள கல் குவாரியில் கல் உடைக்கும் உரிமம் பெறுவதற்கான குத்தகை ஏலம் நடைபெற்றது. இதில், கோவில்பட்டியில் 4 இடங்களிலும், சண்முகசுந்தரபுரத்தில் 4 இடங்களிலும், கோடாங்கிபட்டியில் ஒரு இடத்திலும் உள்ள கல் குவாரியில் கல் உடைக்கும் உரிமத்திற்கு ஏலம் கோர ஒருவரும் முன் வரவில்லை.
கோடாங்கிபட்டியில் உள்ள ஒரு கல் குவாரிக்கு மட்டும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ஜெ.செந்தில்குமார் என்பவரது பெயரில் ரூ.1.10 கோடிக்கு ஏலம் கோரப்பட்டுள்ளது என்று மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் சாம்பசிவம் கூறினார்.
கல் குவாரி உரிமம் ஏலத்திற்கு அரசு கூடுதல் தொகை நிர்ணயித்துள்ளதாலும், நடைமுறைச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும் ஏலம் கேட்க ஆர்வமில்லை என்று குத்தகைதாரர்கள் சிலர் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.