காஷ்மீரில் சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்ததை கண்டித்து கம்பத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்திய கண்டனப் பேரணியில் சிறுவர், சிறுமியர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்ற 6 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை, கம்பத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர். உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி தலைமையிலான போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கு எச்சரிக்கை செய்தனர். பின்னர் சிறுவர், சிறுமியர்களை போலீஸார் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுவர், சிறுமியர்களை அனுமதியில்லாமல், ஊர்வலத்தில் பங்கேற்க செய்ததாக எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த, சிக்கந்தர் ஜெய்லானி, ஜாபர் சாதிக், முகமது சாஹின், முருகன், நிஜாம்தீன், சாதிக்அலி ஆகிய 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.