நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்தது. வெள்ளிக்கிழமை நீர்மட்டம் 112.50 அடியாக இருந்தது. வெள்ளிக்கிழமை இரவு அணைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து, சனிக்கிழமை நீர்மட்டம் 113.60 அடியானது.
சனிக்கிழமையும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அணையின் நீர்மட்டம் 114.26 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 1,593 மில்லியன் கன அடியாக உள்ளது.
நீர்வரத்து வினாடிக்கு 1,721 கன அடியாக இருந்தது. இதனால் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீரை பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டனர்.
தண்ணீர் திறப்பு அதிகரித்ததால், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.