தேனி மாவட்டம், உத்தமபாளயைம் முல்லைப் பெரியாற்றில் கோழி கழிவுகளை கொட்டுவதால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உத்தமபாளையம் நகரின் மையப் பகுதியின் வழியே முல்லைப் பெரியாறு ஓடுகிறது. தற்போது, இப்பகுதியில் நெற்பயிர் அறுவடை செய்து, விவசாயப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் விவசாயத்துக்கு திறக்கும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது மாவட்டத்திலுள்ள நகராட்சி , பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த சில கோழிக் கடை உரிமையாளர்கள் ஆற்றில் கழிவுகளை கொட்டி வருகின்றனர். குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்படும் இந்த சூழ்நிலையில், இதுபோன்ற கழிவுகளை கொட்டுவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே , சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆற்றில் கழிவுகளை கொட்டி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.