பொம்மிநாயக்கன்பட்டி கலவரம்: ஆதி திராவிட ஆணைய துணைத் தலைவர் விசாரணை
By DIN | Published On : 08th May 2018 02:20 AM | Last Updated : 08th May 2018 02:20 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியில் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.
பொம்மிநாயக்கன்பட்டியில் கடந்த ஏப்ரல் 24 -ஆம் உயிரிழந்தமூதாட்டி சடலத்தை பள்ளிவாசல் தெருவில் எடுத்துச்செல்லும்போது இருபிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மே 5-ஆம் தேதி காலை இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கு மேற்பட்ட வீடுகள், கடைகள், கார் மற்றும் இரு சக்கர வாகனம் எரிக்கப்பட்டன. இதில் இரு தரப்பினரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இருதரப்பையும் சேர்ந்த 30- க்கு மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று அங்குள்ள பெண்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கடந்த 5-ஆம் தேதி வன்னியம்மாள் என்ற பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் தாழ்த்தப்பட்டோர் வீடுகள், ஸ்டூடியோ ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கலைச்செல்வன் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் , வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கலவரத்தில் வெளியூரில் இருந்து ஆள்கள் வந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலரை போலீஸார் கைது செய்தனர். மீதமுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்பகுதியில் சுமூகநிலை ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் எம்.பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் மற்றும் மாவட்ட வன்கொடுமை விழிப்புணர்வு தடுப்புக்குழு உறுப்பினர் ப.பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.