தேனி மாவட்டம், கம்பம் பேருந்து நிலையப் பகுதியில் வெள்ளிக்கிழமை அரசு மதுபானக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
கம்பம் பேருந்து நிலையம், மாரியம்மன் கோயில் தெரு, நகராட்சி ஆடு வதைக் கூடம் அருகே அரசு மதுபானக் கடைகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதைக் கண்டித்து, இப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தினர். இதனிடையே, வெள்ளிக்கிழமை பேருந்து நிலையப் பகுதியில் அரசு மதுபானக் கடை மற்றும் மதுபானக் கூடம் திறப்பு விழாவுக்காக, பந்தல் அமைத்து நாற்காலி, மேஜைகள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதையறிந்த, இப்பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் மதுபானக் கடை முன் திரண்டனர்.
ஷாமியானா பந்தல், மேஜை, நாற்காலிகளை தூக்கி எறிந்து கடையை மறித்து அமர்ந்தனர். தகவலறிந்த, கம்பம் வடக்குக் காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடையைத் திறக்க அரசு உத்தரவு உள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கக் கூறி பெண்களை கலைந்து போகச் செய்தனர். அதன்பின்னர், அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டது.