தேனி மாவட்டம், சின்னமனூர் அடுத்த புலிக்குத்தியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத் துறையினர் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சின்னமனூரிலிருந்து மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிக்குத்தி, சங்கராபுரம் வழியாக போடி வரையில் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையிலுள்ள புலிக்குத்தி, சிந்தலைச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் போடி நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மற்றும் புலிக்குத்தி உள்ளிட்ட இடங்களில் குறுகலான சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களுக்கு பட்டா இருப்பதாகக் கூறியதை அடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் அந்த இடங்களை அகற்றாமல் பாரபட்சமாக நடந்து கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சாலை விரிவாக்கப் பணியை வரவேற்கும் பொதுமக்கள், எந்தவித பாரபட்சமும் காட்டாமல் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை பட்டா போட முடியாது. அந்த பட்டாவை ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும் என்றார்.