முல்லைப் பெரியாற்றில் திங்கள்கிழமை குளித்துக் கொண்டிந்த இளைஞர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை பணியாளர்கள் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சேகர்(40). இவர், போடியில் உணவகம் நடத்தி வந்தார். ராசிங்காபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு (34). நண்பர்களான இருவரும் உப்புக்கோட்டையில் உள்ள முல்லைப் பெரியாற்றில் திங்கள்கிழமை குளிக்கச் சென்றுள்ளனர்.
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்பகுதியில் இருந்தவர்கள் ஆற்றில் குதித்து நீந்திச் சென்று பிரபுவை மீட்டனர். சேகர் தண்ணீரில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.
ஆற்றில் மூழ்கிய சேகரை மீட்கும் பணியில் தேனி மற்றும் போடி தீயணைப்பு நிலைய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.