வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ளதையொட்டி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத் துறைகள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ச. கந்தசாமி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் கா. தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய மழை வெள்ளத் தடுப்புப் பணிகள், பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள், சுகாதாரப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர்கள் உத்தமாளையம் எஸ். சென்னியப்பன், பெரியகுளம் சி. ஜெயப்ரிதா, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சேதுராமன், மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு வட்டாட்சியர் நஜீமுனிசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.