பெரியகுளம் அருகே கிராம மக்கள் ஊர்வலமாகச் சென்று பள்ளிக்கு இலவசமாக பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினர்.
பெரியகுளம் அருகே ஆரோக்கியமாதா நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சில நாள்களுக்கு முன் கல்வி மேலாண்மைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கு தேவையான பொருள்கள் இலவசமாக வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட பொருள்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பள்ளித் தலைமையாசிரியர் தமயந்தியிடம் வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அவர், நிகழாண்டில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதுக்கான தொகை ரூ. 10,000-த்தை நன்கொடையாக பள்ளிக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் சதீஸ், சம்பூர்ணபிரியா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஆனந்த கிருஷ்ணன் நன்றி கூறினார்.