பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாய்க் கரையில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதால் குடிநீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தாமரைக்குளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் உறைகிணறு அமைக்கப்பட்டு தாமரைக்குளம் மற்றும் வடுகபட்டி பேரூராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதோடு, இக்கண்மாய் மூலம் 200 மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
இந்நிலையில், பெரியகுளம் நகராட்சி,தென்கரை பேரூராட்சி, தாமரைக்குளம் பேரூராட்சி கழிவுநீர் சங்கமிக்கும் இடமாக கண்மாய் மாறியுள்ளது. இதனால் கண்மாய் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
மேலும் பெரியகுளம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை தாமரைக்குளம் கண்மாய் கரைகளில் கொட்டி செல்கின்றனராம். இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளாலும் கண்மாய் நீர் மாசடைகிறது. மேலும் மருத்துவமனைகைளில் அகற்றப்படும் உடல்உறுப்புக்களையும் இப்பகுதியில் வீசி செல்கின்றனராம்.
இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாய் கரைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது குறித்து பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தது: சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, காவல் நிலையத்தில் புகார் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.