தேனி மாவட்டம் கம்பத்தில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம், கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை தொழிலாளர்களான அதே தெருவைச் சேர்ந்த பரமன் (60), உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த நீதி(47) ஆகிய இருவரும் பிரித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள காய்கறிக்கடை கிட்டங்கியில் காலி அட்டைப் பெட்டிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடலூர் கருணாநிதி காலனியைச் சேர்ந்த அரசபாண்டியன்(32) ஆட்டோவை அவ் வழியாக ஓட்டி வந்தார். அப்போது, ஆட்டோ செல்வதற்கு இடைஞ்சாலாக இருப்பதால் பந்தல் பொருள்களை அப்புறப்படுத்துமாறு அவர்களிடம் கூறியுள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் பந்தல் பிரிப்பதற்காக வைத்திருந்த கத்தியால் அரசபாண்டியை பரமன் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வாணி வழக்குப் பதிந்து பரமன், நீதி ஆகிய 2 பேரை கைது செய்தார்.