தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர், விதவைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நலத் திட்ட உதவிகள் முழுமையாக வழங்கப்படும் என்று தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பொன்னம்மாள்பட்டி, கண்டமனூர், அண்ணாநகர், கடமலைக்குண்டு, குமணன்தொழு, காமன்கல்லூர், கோம்பைத்தொழு, அரண்மனைப்புதூர், வருஷநாடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் வாக்குச் சேகரித்தார்.
அப்போது அவர் பேசியது: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமரானதும் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.6,000 வீதம் நிதி உதவி வழங்கப்படும். மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படும். பாஜக அரசு கடந்த மக்களவை தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதியோர், விதவைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நலத் திட்ட உதவிகள் பாரபட்சமின்றி முழுமையாக வழங்கப்படும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட சம்பள குளறுபடிகளை களைந்து, பயனாளிகளுக்கு தினச் சம்பளம் ரூ.300 ஆக உயர்த்தி வழங்கப்படும். கேபிள் தொலைக்காட்சிக் கட்டணம் குறைக்கப்படும் என்றார்.
முன்னாள் எம்.பி., பெ.செல்வேந்திரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன், க.மயிலை திமுக ஒன்றியச் செயலர் சுப்பிரமணி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.