தேனி மக்களவைத் தொகுதியில் பகிரங்க பணப் பட்டுவாடா நடைபெறுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்தார்.
போடியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகம் முழுவதும், அதிலும் குறிப்பாக, தேனி தொகுதியில் பணப் பட்டுவாடா நடைபெற்று வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் தரம் தாழ்ந்த முறையில் பிரசாரம் செய்வது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக முதல்வர் கூறுகிறார். ஆனால் முகிலன் காணாமல் போன சம்பவம், பொள்ளாச்சி பாலியல் சம்பவம், சனிக்கிழமை நடந்த மாணவி படுகொலை சம்பவம் போன்றவை சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை எடுத்துக் காட்டுகிறது.
காவிரி பிரச்னை, "நீட்' தேர்வு பிரச்னைகளை தீர்க்கவில்லை. "கஜா' புயல் பாதித்த போது வராத பிரதமர் மோடி தற்போது வாரத்திற்கு ஒருமுறை தமிழகத்திற்கு வருகிறார். கேரளத்தில் காங்கிரசுடன் கூட்டணி சேராதது பெரிய விஷயம் அல்ல. எந்த மாநிலமானாலும் பா.ஜ.க.வை தோற்கடிப்பதுதான் எங்களது ஒரே நோக்கம் என்றார்.