தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாகப் புகார் தெரிவித்து, தேனி மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள் இருவர், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் ம. பல்லவி பல்தேவ், மக்களவைத் தேர்தல் பொதுப் பார்வையாளர் உபேந்திரநாத் சர்மா ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேனி மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிடும் இந்திய நாட்டுப் பற்றுக் கழகத் தலைவர் எஸ். ராஜரிஷி குருதேவ், பகுஜன் திராவிடக் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் பி. சிலம்பரசன் ஆகியோர், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மக்களவை தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் தனித் தனியே அளித்த மனுக்கள் விவரம்:
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ப. ரவீந்திநாத்குமார் சார்பில், அக் கட்சியினர் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000, ரூ.1,500 வீதம் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.
இதைத் தடுப்பதற்கு, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிமுக சார்பில் பிரசாரக் கூட்டத்துக்கு பொதுமக்களை அழைத்து வரவும், தேர்தலில் வாக்களிப்பதற்கும் பணம் வழங்கப்படுவதால், தேனி மக்களவைத் தொகுதியில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை.
எனவே, தேனி மக்களவைத் தொகுதி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.