தேனியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தேனி மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.
தேனி பழைய டி.வி.எஸ்.சாலை பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை (64). இவர், தேனி பாரஸ்ட் சாலை பகுதியில் உள்ள தனது மகன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து கடந்த 2017, மே 19-ஆம் தேதி சிறுமியின் தாயார் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், செல்லதுரை மீது குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திலகம், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த செல்லதுரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.