தேனி மாவட்டம், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் செவ்வாய்க்கிழமை தண்ணீரில் மூழ்கிய நண்பரைக் காப்பாற்றிய சிறுவன் உயிரிழந்தான்.
உத்தமபாளையம் அருகே முத்துலாபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் கண்ணன்(15). இவர், அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து முடித்து தற்போது விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், இவரது நண்பர்களான நவநீதன், சரத்குமார் உள்பட 4 பேர், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குளித்துள்ளனர்.
அப்போது, சரத்குமார் எதிர்பாராதவிதமாக ஆற்று நீரில் முழ்கி உயிருக்குப் போரா டியதை பார்த்த கண்ணன், தண்ணீரில் குதித்து அவரைக் காப்பாற்றியுள்ளார்.
ஆனால், மூச்சுத் திணறிய கண்ணன் அதே இடத்திலேயே மூழ்கியுள்ளார்.
உடனே, சக நண்பர்கள் உதவி கோரி சத்தம் போட்டதால், அருகே இருந்தவர்கள் தண்ணீரில் குதித்து மூழ்கிய கண்ணனை மீட்டுள்ளனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.
இது குறித்த புகாரின்பேரில், உத்தமபாளையம் காவல் சார்பு-ஆய்வாளர் முனியம்மாள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.