சின்னமனூர் ஒன்றியங்களில் நேரு இளையோர் மையத்தினர், தூய்மைப் பணிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த மையத்தின் கண்காணிப்பாளர் பாபு தலைமையில், இளைஞர்கள் பலர் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதின் தீமை குறித்தும், வீட்டில் கழிப்பறைக் கட்டி பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மை குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்து கூறுகின்றனர்.
அதேபோல், மழை வளம் பெற வீடுகள்தோறும் மரங்கள் வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து தெருமுனைப் பிரசாரமும் செய்கின்றனர். இதன்படி, வியாழக்கிழமை சின்னமனூரில் முல்லைப் பெரியாற்றின் படித்துறை , விநாயகர் கோயில் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் தூய்மை பணி செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.