தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை நீர் வரத்து குறைந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சுருளி அருவிக்கு மேகமலையில் உள்ள தூவானம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு சுருளிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்த வருவது வழக்கம். எனவே இதையொட்டி ஜூலை 30 இல் அணை திறக்கப்பட்டு ஜூலை 31இல் சுருளி அருவியை தண்ணீர் வந்தடைந்தது. இதனால் ஆடி அமாவாசையை பக்தர்கள் சுருளியில் சிறப்பாக கொண்டாடினர்.
இதற்கிடையில், தூவானம் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் சுருளிக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் வெள்ளிக்கிழமை சுருளி அருவியில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது, இந்நிலையில் சனிக்கிழமை ஆடிபெருக்கு விழா நடைபெற உள்ளதால்அன்றைய தினமும் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது நீர்வரத்தின்றி காணப்படுவதால் பக்தர்களால் ஆடிப் பெருக்கு விழாவை சுருளி அருவியில் கொண்டாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறியது: மேகமலை வனப்பகுதியில் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் தூவானம் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் மதகுகள் அடைக்கப்பட்டன. இதனால் அருவிக்கு தண்ணீர் வரத்து நின்று விட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால்தான் அருவிக்கு நீர்வரத்து கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.