தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய எல்லை அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளின் வாகன நுழைவு கட்டணத்தை வனத்துறையினர் உயர்த்தினாலும், ஊராட்சி நிர்வாகம் உயர்த்தாது என்று ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நாகராஜ் தெரிவித்தார்.
சுருளி அருவியில் வனத்துறையினர் நுழைவு கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர். இந்த கட்டண உயர்வு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் மற்றும் வியாபாரிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினரைப் போல் கம்பம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் உள்ள சுருளிப்பட்டி ஊராட்சி சார்பில் அருவியில் வாகனத்தில் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த கட்டணமும் உயர்த்தப்படுமா என்று ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நாகராஜிடம் கேட்ட போது, தற்போது இரு சக்கர வாகனங்களுக்கு, 10 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வனத்துறை நுழைவு கட்டணத்தை உயர்த்தினாலும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் கட்டணத்தை உயர்த்தவில்லை, பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றார்.