வருசநாடு மலைப் பகுதியில் பலத்த மழை: மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மூலவைகை ஆற்றில் வெள்ளிக்கிழமை நீர்வரத்து

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மூலவைகை ஆற்றில் வெள்ளிக்கிழமை நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வெள்ளிமலை வனப்பகுதியில் இருந்து மூல வைகை ஆறு உற்பத்தியாகி வருகிறது.
 இங்குள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு மூல வைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போதிய அளவில் மழை இல்லாததால் கடந்த சில மாதங்களாக மூல வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்பட்டது. இதனால் உறை கிணறுகளில் நீர் வற்றி பெரும்பாலான கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 
மேலும் வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் விவசாயமும் பெருமளவில் பாதிப்படைந்தது. இந்நிலையில் கடந்த 3 நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்காரணமாக மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் வெள்ளிக்கிழமை வருசநாடு கிராமத்தை கடந்து வைகை ஆற்றுநீர் சென்றதால் அப்பகுதிமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
இதனால் வருசநாடு பகுதியில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் தற்போது வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக வனப்பகுதியில் உள்ள அனைத்து ஓடைகளிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால், கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளுக்கு ஏற்பட்டிருந்த குடிநீர் பிரச்னையும் நீங்கியது. வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com