திருச்சியில் தேனியைச் சேர்ந்தவர் மர்ம மரணமடைந்தது குறித்து கண்டோன்மென்ட் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம், கண்டமனூர் வட்டம் கோவிந்த நகரம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் ரவிக்குமார் (28). இவர், தனியார் செல்லிடப்பேசி நிறுவன விளம்பரப் பிரிவில் வேன் ஓட்டுநராக உள்ளார்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக திருச்சி வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு ரெனால்ட்ஸ் சாலையில் வேனில் தூங்கினார். திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வேன் கதவு திறக்காமல் இருப்பதைக் கண்ட சக ஊழியர் கண்டோன்மென்ட் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த கண்டோன்மென்ட் போலீஸார் வேன் கதவைத் திறந்து பார்த்தபோது ரவிக்குமார் இறந்துகிடந்தது தெரியவந்தது. ரவிக்குமார் உடலை மீட்ட போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து வேன் ஓட்டுநர் ரவிக்குமார் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.