தேனி அல்லிநகரத்தில் போலீஸார் எனக் கூறி வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து 6 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.4,140 -ஐ பறிமுதல் செய்ததாக 5 பேர் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேனி அல்லிநகரம், வெங்கலாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையா மகன் முனியாண்டி (62). இவரது உறவினர் ஒருவரை கடந்த 2018, டிசம்பர் மாதம் திருட்டு வழக்கு ஒன்றில் தென்கரை காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய திருட்டு பொருள்கள் முனியாண்டி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகமடைந்த தென்கரை காவல் நிலைய போலீஸார், அவரது வீட்டிலும், அருகில் உள்ள அவரது மகள் பூங்கொடி வீட்டிலும் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2018, டிச. 29 ஆம் தேதி போலீஸார் என்று கூறிக் கொண்டு ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் தனது வீட்டிற்குள்ளும், தனது தங்கை பூங்கொடி வீட்டிற்குள்ளும் அத்துமீறி புகுந்து 6 பவுன் தங்க நகைகள், ரூ.4,140, நகை அடகு ரசீதுகள், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றதாக தேனி நீதித் துறை நடுவர் மன்றத்தில் முனியாண்டி புகார் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்தப் புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.