வைகை அணையில் போலீஸார் புதன்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியை பலப்படுத்தும்படி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டார். இதனையடுத்து 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை மற்றும் ஆண்டிபட்டி நகர் பேருந்து நிலையம், மருத்துவமனை, கோயில்கள், சந்தை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சிறப்பு -சார்பு ஆய்வாளர் தமிழரசன் தலைமையில், சிறப்பு சார்பு -ஆய்வாளர்கள் ரவிராஜ், அன்பழகன் மற்றும் மோப்பநாய் பயிற்சியாளர் ஜெகநாதன் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அணைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.
மேலும் அணைப் பகுதியில் பொதுமக்கள் கூடும் பூங்காங்கள், சிறுவர்கள் பூங்கா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் வைத்திருந்த பைகளையும் போலீஸார் சோதனை செய்தனர்.
அப்போது பொது இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் பைகள் மற்றும் பொருள்களை தொடக்கூடாது என்றும், சந்தேமான முறையில் நடமாடும் நபர்கள் குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு போலீஸார் அறிவுறுத்தினர்.