ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்ற ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3,250 இளைஞர்கள் பங்கேற்றனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற முதல் நாள் முகாமில் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 3,000 பேர் பங்கேற்றனர். இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3,250 பேர் பங்கேற்றனர். அதிகாலை 3 மணிக்கு நுழைவு அனுமதி பெற்று பல்வேறு சோதனைகளுக்குப் பின் தலா 300 பேர் வீதம் ஓடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, மார்பளவு, உயரம், உடல் தகுதி, பார் எடுத்தல், எஸ் வடிவ ஓட்டம், நீளம் தாண்டுதல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு பிரிவிலும் தேர்வான சிலர் தவிர மற்றவர்களை வெளியேற்றினர். இறுதியாக கல்வித் தகுதி, சிறப்பு தகுதியின்படி பிரித்து அடுத்தடுத்த சோதனைகளுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல், மதுரை, நாமக்கல், கோவை உள்ளிட்ட 8 மாவட்டத்தினர் அடுத்தடுத்த நாள்களில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை அனுமதிக்கப்படுகின்றனர். இதில் தேர்வாகும் நபர்களுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி வரை பிற சரிபார்ப்புப் பணிகள், மருத்துவப் பரிசோதனை போன்றவற்றுடன் முகாம் நிறைவுபெறுகிறது.