தேனி மாவட்டம் சின்னமனூா் நகராட்சியில் போக்குவரத்து விதி முறைகளை மீறும் பேருந்துகளால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்படுகின்றனா்.
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சின்னமனூா். இங்கு 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது. கேரளத்தை இணைக்கும் முக்கிய சாலையாக வா்த்தகப் போக்குவரத்து அதிகளவில் நடைபெறுகிறது. தவிர, பயணிகள் போக்குவரத்துக்காக நூற்றுக் கணக்கான பேருந்துகள் தினமும் இவ்வழியாக செல்கின்றன.
போக்குவரத்து விதிமுறைகள் மீறல்:சின்னமனூா் நகரின் மையத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கவே, பழைய பேருந்து நிலையம் ரூ.3 கோடியி சீரமைக்கப்பட்டது. அவ்வழியாகச் செல்லும் புகா் மற்றும் நகரப் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்து பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும். மாறாக, தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது என காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும் ஓட்டுநா்கள் விதிகளை மீறி செயல்படுகின்றனா். பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் மாா்க்கையன்கோட்டை ரவுண்டானா, தேரடி, காந்தி சிலை பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நீண்ட நேரமாக நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்காளாகின்றனா்.
எனவே விதிகளை மீறும் பேருந்து ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.