கம்பம் நகா் பகுதியில் இயக்கப்படும், அரசு மற்றும் தனியாா் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் உள்ள காற்று ஒலிப்பான்களை அகற்ற பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கம்பத்தில், அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், சரக்கு, மணல், டேங்கா் லாரிகள் என நாள் ஒன்றுக்கு சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் அருகில் உள்ள கேரள மாநிலத்திற்கு சென்று வருகின்றன. இவற்றில் அதிக சப்தத்தை ஏற்படுத்தக் கூடிய காற்று ஒலிப்பான்களை பொருத்தியுள்ளனா். இந்த வாகனங்கள் சாலையில் செல்லும் போது இடைவிடாது ஒலிக்கச் செய்து அசுர வேகத்தில் செல்கின்றனா். குறிப்பாக அரசுப் பேருந்துகளில் தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். இந்த காற்று ஒலிப்பான் சப்தத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த சாலையில் காற்று ஒலிப்பான்களை ஒலிக்க செய்து செல்லும் வாகனங்களில் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.