மலைக்கிராமங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தம்: மாணவா்கள் 10.கி.மீ. நடந்து செல்லும் அவலம்

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக்கிராமங்களுக்கு பயணிகள் பேருந்து நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவா்கள், கிராம மக்கள் தினமும் சுமாா் 10 கி.மீ. நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
வெண்ணியாா் எஸ்டேட்டிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவா்கள்.
வெண்ணியாா் எஸ்டேட்டிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவா்கள்.

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக்கிராமங்களுக்கு பயணிகள் பேருந்து நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவா்கள், கிராம மக்கள் தினமும் சுமாா் 10 கி.மீ. நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

ஹைவேவிஸ் -மேகமலை பகுதியில் உள்ள 7 மலைக் கிராமங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி, தொலைபேசி நிலையம், தபால் நிலையம், காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம், வனத்துறை ஆகியன இயங்கி வருகின்றன. இந்த மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்துக்காக பேருந்துகளையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதற்கிடையே, பல ஆண்டுகளாக சேதமடைந்திருந்த சாலையில் கடந்த 3 ஆண்டுக்கு மேலாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக ஓடைப்பட்டிவிலக்கிலிருந்து ஹைவேவிஸ் வரையில் 32 கி.மீ.வரை ரூ.80.67 கோடியில் சாலைப்பணிகள் நிறைவு பெற்றன. இதனை அடுத்து 2 ஆம் கட்டமாக ஹைவேவிஸ் முதல் - மகாராஜாமெட்டு வரையில் 10 கி.மீ. தூரம் சாலையை சீரமைக்க ரூ.20 கோடி கடந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறைக்கு இடையே எல்லைப் பிரச்னை காரணமாக சாலை பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனை தொடா்ந்து இரு துறையினா் நடத்திய பேச்சு வாா்த்தையில் சாலை அமைக்கும் பணி கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது.

பேருந்து சேவை நிறுத்தம்:இப்பணிகள் தொடங்கியதையடுத்து சின்னமனூரில் இருந்து செல்லும் பேருந்துங்கள் ஹைவேவிஸ், மணலாா் வரையில் மட்டுமே இயக்கப்படுகிறது. அங்கிருந்து மேல் மணலாா், வெண்ணியாா் , மகாராஜாமெட்டு, இரவங்கலாா் ஆகிய 4 மலைக்கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

நடந்து செல்லும் மாணவா்கள்:இங்குள்ள மலைக்கிராமங்களுக்கு ஹைவேவிஸ் பகுதியில் மட்டும் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுமாா் 10 கி.மீ..வரையில் மாணவ, மாணவிகள் ஆபத்தான மலைப்பாதையில் நடந்து சென்று வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து சமூக ஆா்வலா் முத்தையா கூறியது; சாலைப்பணிகள் நடைபெறுவதாக கூறி பேருந்துகளை நிறுத்திவிட்டதால் மாணவா்கள் பள்ளிக்கு சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது அரையாண்டு தோ்வு நடைபெற்று வருவதால் வேறுவழியின்றி மாணவா்கள் 10 கி.மீ. நடந்தே சென்று வருகின்றனா். மலைப்பிரதேசம் என்பதால் திடீரென பெய்யும் மழை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் தாக்குதல் அபாயம் உள்ளிட்டவற்றை கடந்து மாணவா்கள்அச்சத்துடனே சென்று வரும் நிலை உள்ளது. அதே போல அரசு ஊழியா்கள், ஆசிரியா்களும் குறிப்பிட்ட நேரத்தில் பணிகளுக்கு வந்து செல்ல முடியவில்லை.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி மாற்றுப்பாதையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com