ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானியைச் சேர்ந்த முருகன் மகன் ஹரிஷ் (24). இவர் தனது உறவினர் அஜயுடன் (13) ஆண்டிபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். பின்னர் வேலை முடிந்து இருவரும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே கொத்தப்பட்டியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் நரேஷ் பாண்டி (24), அவரது நண்பர்கள் வரதராஜபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் மனோஜ் (23), கருப்பையா மகன் முகிலன் (23), ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கொத்தப்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி சென்றுள்ளனர்.
இந்த இரண்டு வாகனங்களும் ஆண்டிபட்டி ஆரோக்ய அகம் அருகே வந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் நரேஷ் பாண்டி உயிரிழந்தார்.
முகிலன், மனோஜ், அஜய் ஆகியோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் அஜய் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ராஜதானி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.