குரங்கணி-முட்டம் இடையே போக்குவரத்துக்கு தடை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்
போடி அருகே குரங்கணியில் இருந்து முட்டம் செல்லும் சாலையில் வேலி அமைத்து வனத்துறையினர் போக்குவரத்தை தடைசெய்துள்ளது குறித்து முட்டம் விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜா, செயலர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
குரங்கணியில் இருந்து முட்டம், மேல்முட்டம் ஆகிய மலைக் கிராமங்களுக்குச் செல்வதற்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், மண் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இச்சாலையின் குறுக்கே வனத்துறையினர் வேலி அமைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.
இதனால் குரங்கணியில் இருந்து முட்டம் பகுதிக்கு விவசாயம் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பொருள்களை வாகனங்களில் கொண்டு செல்லவும், முட்டம் பகுதியில் இருந்து குரங்கணியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை பெற நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வாகனங்களில் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, குரங்கணி-முட்டம் சாலையில் விவசாயிகள் மற்றும் மலைக் கிராம மக்கள் வழக்கம்போல் வாகனங்களில் சென்றுவர அனுமதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.