போடியில் டாஸ்மாக்கடையில் செவ்வாய்க்கிழமை புகுந்த ஏழரை அடி நீளமுள்ள சாரைப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோயில் தெருவில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இக்கடையின் ஊழியர் சக்தி செவ்வாய்க்கிழமை கடையை திறந்தபோது, சாரைப் பாம்பு இருந்ததை கண்டு, போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கராஜன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, ஏழரை அடி நீளமுள்ள சாரைப் பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்து, வனப்பகுதிக்குள் விடப்பட்டது.