பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் மையத்தில் மழையால் நெல் மூட்டைகள் பாதிப்படைந்துள்ளதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேல்மங்கலம் பகுதியில் உள்ள வராக நதிக்கரையோரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் விளையும் நெல் இடைத்தரகர்கள் மூலம் வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனையடுத்து, மேல்மங்கலம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆரம்பித்தது.
இதன்மூலம், இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் விளையும் நெல்மணிகளை மையத்தில் விற்று வந்தனர். இந்நிலையில், தற்போது மேல்மங்கலம் மற்றும் ஜெயமங்கலம் பகுதியில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், கொள்முதல் நிலையங்களில் தினமும் டன் கணக்கில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், போதிய பணியாள்கள் இல்லாததால், கொள்முதல் செய்வதில் 2 முதல் 7 நாள்கள் வரை தாமதமாகி வருகிறது. சில நாள்களுக்கு முன், கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக அப்பகுதியினர் நெல்களை மையத்தின் முன் அடுக்கி வைத்திருந்தனர்.
கடந்த 2 நாள்களாக பெய்த சாரல் மழையால், நெல் மூட்டைகள் நனைந்து முளைக்க ஆரம்பித்துள்ளன. இதனால், போதிய விலை கிடைக்காது எனக் கூறி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே, நிலையத்துக்கு கொண்டு வரப்படும் நெல்களை உடனடியாக கொள்முதல் செய்து, பாதுகாப்பான இடங்களில் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.