தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
கொடுவிலார்பட்டி, பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ராசு மகன் பெரியசாமி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தேனி மகளிர் காவல் நிலையத்தில் ஜோதி தனது கணவர் மீது புகார் அளித்தார். அதில், திருமணத்தின்போது தனக்கு வரதட்சணையாக அணிவித்திருந்த 90 சவரன் நகைகளை பெரியசாமி வாங்கி வைத்துக் கொண்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவாகவும், மேலும் 50 சவரன் நகை மற்றும் ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் தன்னுடன் வாழ முடியும் என்று கூறி தன்னையும், தனது குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிந்து, பெரியசாமியை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.