தேனி மாவட்டம், மேலக்கூடலூரில் பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேர் மீது உத்தமபாளையம் மகளிர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலக்கூடலூர் கழுவன் சொக்கத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் திவ்யா (29). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன், திவ்யாவின் தாய் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று இருப்பதாகவும், அந்தப் பணத்தை வாங்கி வரும்படியும் கூறி திவ்யாவின் கணவர் கார்த்திகேயன், மாமியார் ஜெயா மற்றும் மாமனார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக உத்தமபாளையம் காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார்.
அதன்பேரில், கார்த்திகேயன் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.