ஒட்டன்சத்திரம் அருகே தண்ணீர் தேடி வந்த கடமான் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரீல் மூழ்கி உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள குழந்தைவேலப்பர் கோயில் பின்புறம் அப்பணசாமி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் விவசாயக் கிணறு உள்ளது. புதன்கிழமை இரவு, இப்பகுதியில் தண்ணீர் தேடி வந்த கடமான் இந்தக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அப்போது, கிணற்றுச் சுவரில் மோதி தலையில் காயமேற்பட்டுள்ளது. வியாழக்கிழமை, தோட்டத்தில் வேலை செய்பவர்கள் கிணற்றில் பார்த்தபோது, கடமான் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே, ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஒட்டன்சத்திரம் வனவர் அறிவழகன் மற்றும் வனக் காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயணைப்புப் படை வீரர்களின் உதவியுடன் இறந்த மானின் உடலை மீட்டனர். வடகாடு கால்நடை மருத்துவ அலுவலர் மணிவண்ணன் பிரேதப் பரிசோதனை செய்து, அப்பகுதியிலேயே புதைத்தனர். இது குறித்து வனவர் அறிவழகன் கூறியது: கிணற்றில் விழுந்து இறந்தது 2 வயதுள்ள ஆண் கடமான் ஆகும். தண்ணீர் தேடி வந்தபோது, எதிர்பாராமல் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது என்றார்.