தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 27 இடங்களில் புதிய மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்டிபட்டி நகரில் மின்சார இணைப்பு வழங்குவதற்காக ஏற்கெனவே 64 மின்மாற்றிகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் இணைப்பு காரணமாக அனைத்து பகுதிகளுக்கும் சீராக மின்சாரம் வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஆண்டிப்பட்டி நகரில் சில இடங்களில் உயர் மற்றம் குறைந்த மின் அழுத்த குறைபாடு காணப்படுகிறது. இதனால் சீராக மின்சாரம் வழங்கும் வகையிலும், கூடுதல் இணைப்புகள் வழங்கும் வகையிலும் நகரில் கூடுதல் மின்மாற்றிகள் பொருத்த வேண்டும் என்று அரசுக்கு மின்வாரியத்தினர் பரிந்துரை செய்தனர்.
இதன்பேரில் நகரில் கூடுதலாக ரூ.2 கோடி மதீப்பீட்டில் 27 புதிய மின்மாற்றிகள் அமைக்க மத்திய மின்மேம்பாட்டு துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட 27 இடங்களில் தலா 63 கிலோவாட் சக்தியுடைய புதிய மின்மாற்றிகள் பொருத்தும் பணி கடந்த சில நாள்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்த ஒரு வாரத்திற்கு நகரில் அவ்வபோது மின்தடை ஏற்படும் என மின்சார வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.