போடியில் தனியார் நிறுவனத்தில் புகுந்து செல்லிடப்பேசி திருடிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
போடி வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி (40). இவர் போடி- தேனி சாலையில் உள்ள தனியார் தேயிலை நிறுவன அலுவலகத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரும், இங்கு வேலை செய்யும் ராஜேந்திரன் என்பவரும் இரவு நேரத்தில் காவல் பணியில் இருந்துள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் நிறுவனத்திற்குள் புகுந்து, இரண்டு செல்லிடப்பேசிகளை திருடிக்கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த முனியாண்டி மர்ம நபரை கையும் களவுமாக பிடித்து போடி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர், போடி மதுரைவீரன் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் விவேகானந்தன் (24) என்பது தெரிந்தது. இதனைத்தொடர்ந்து போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அவர் திருடிய செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.