போடி அருகே பால் வியாபாரியின் வீட்டுக் கதவை உடைத்து 35 பவுன் நகைகள் திங்கள்கிழமை திருடிச் செல்லப்பட்டுள்ளது.
போடி அருகே மீனாட்சிபுரம் விநாயகர் கோயில் தெருவில் வசிப்பவர் கருப்பையா மகன் குருநாதன் (48). பால் வியாபாரம் செய்துவரும் இவர், தனது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக கடந்த 12 ஆம் தேதி குடும்பத்துடன் ராமேசுவரம் சென்றிருந்துள்ளார். அதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை வீடு திரும்பிய இவர், மாடியில் கண்ணாடியாலான கதவு உடைக்கப்பட்டிருந்தது. உடனே, மாடியில் இருந்த பீரோவை திறந்து பார்த்ததில், 35 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து குருநாதன் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போடி டி.எஸ்.பி. தி. ஈஸ்வரன், ஆய்வாளர் வெங்கடாசலபதி மற்றும் போலீஸார் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.
மேலும், தடய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டது. காவல் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இது சம்பந்தமாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.