போடி அருகே திங்கள்கிழமை அரசு கட்டடத்தில் தீ பிடித்ததில், ஊராட்சிக்கு சொந்தமான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
போடி அருகே சிலமலை ஊராட்சி அலுவலகத்துக்குப் பின்புறம் வேளாண்மைத் துறைக்குச் சொந்தமான குடியிருப்பு கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் பயன்பாட்டில் இல்லாததால், ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் பைப்புகள், தெருவிளக்கு உபகரணங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ரெங்கராஜ் தலைமையில், வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.