தேக்கடியில் யானை சவாரி நிலையத்தில் துணை பாகனை யானை மிதித்து கொன்றதால் புதன்கிழமை முதல் யானை சவாரியை குமுளி போலீஸார் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
சர்வதேச சுற்றுலாத் தலமான தேக்கடியில் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக படகு சவாரி, யானை சவாரி, மூங்கில் படகு, பார்டர் வாக்கிங் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. குமுளி அட்டப்பள்ளம் பகுதியில் ஏராளமான தனியார் யானை சவாரி நிலையங்கள் உள்ளன. இங்குள்ள எலிபன்ட் ஜங்ஷன் என்ற யானை சவாரி நிலையத்தில் ஐந்து யானைகள் உள்ளன.
இதில் மீனாட்சி என்ற யானை செவ்வாய்க்கிழமை, மாலை சவாரி முடித்துவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்து. யானையுடன் துணை பாகனான பாஸ்கரன் (55) வந்துள்ளார். அப்போது யானை திடீரென பாஸ்கரனை கீழே தள்ளி மிதித்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஒடிவந்தவர்கள் அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்த குமுளி காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இப்பகுதியில் யானை சவாரி தற்காலிகமாக புதன்கிழமை முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.