தேனியில் அதிமுக சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர்.,பிறந்தநாள் விழாவின் போது அக்கட்சியினர் பட்டாசு வெடித்ததில் சுமை தூக்கும் தொழிலாளியின் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
தேனி, நேருசிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு போக்குவரத்து சிக்கனல் அருகே அதிமுக சார்பில் தேனி நகரச் செயலர் கிருஷ்ணகுமார் தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடைபெற்றது. தேனி மக்களவை உறுப்பினர் ரா.பார்த்திபன், மாவட்ட இலக்கிய அணிச் செயலர் முருகேசன், முன்னாள் மாவட்டச் செயலர் டி.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் பங்கேற்க வந்திருந்த அதிமுக மாவட்டச் செயலர் சையதுகானை வரவேற்பதற்கு அக்கட்சியினர் சாலையில் பட்டாசு வெடித்தனர். அப்போது அவ்வழியாக அரண்மனைப்புதூரைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி முத்துராஜ்(60) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பட்டாசு தீப்பொறி இருசக்கர வாகனம் மீது தெறித்து விழுந்ததில், வாகனத்தின் முன்பகுதி தீப்பற்றி எரியத் தொடங்கியது. அப்போது, முத்துராஜ் இருசக்கர வாகனத்தை சாலையில் விட்டு விட்டு தப்பினார். அங்கிருந்த தேனி காவல் நிலைய போலீஸார் மற்றும் அதிமுக வினர் தீயை அணைத்து, சேதமடைந்த இருசக்கர வாகனத்தை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.