ஆண்டிபட்டி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த கல்வி ஆண்டு வரை மதுரை காமராஜர் பல்கலைகழக உறுப்பு கல்லூரியாக செயல்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் அரசு கல்லூரியாக செயல்பட அரசு உத்தரவிட்டது.
இக்கல்லூரியில் கடந்த ஆண்டு வரை முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை 340 ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது அது 200 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு மே 29, 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வில் பி.ஏ.,பொருளாதாரம் பிரிவில் 60, பி.எஸ்.சி., கணிதம் பிரிவில் 60, பி.எஸ்.சி., இயற்பியல் பிரிவில் 40, பி.காம்., (சி.ஏ.) பிரிவில் 40, மொத்தம் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனிடையே மாணவர்கள் சேர்க்கை குறைக்கப்பட்டதால் இப்பகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 20 சதவீத கூடுதல் இடங்களுக்கு மாணவர்களை தேர்வு செய்ய அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வுக்குப்பின் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.