சாலையில் பள்ளம் தோண்டி போக்குவரத்தை நிறுத்திய ஒப்பந்ததாரர்: உத்தமபாளையத்தில் அத்துமீறல்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே தரமற்ற முறையில் சிமெண்ட் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர், அந்த

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே தரமற்ற முறையில் சிமெண்ட் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர், அந்த சாலையில் வாகனங்கள் சென்று வராமல் இருக்க குறுக்கே பள்ளம் தோண்டியதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 
      உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியிலிருந்து புலிக்குத்தி வரை விவசாயப் பணிக்காக சாலை அமைக்கப்பட்டது. 5 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த சாலை, உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாக பராமரிப்பு செய்யப்படுகிறது.
     இந்நிலையில், பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிய  இச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் மூலமாக இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. விவசாயிகள் பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து, 2 ஆண்டுகளாக 2 கட்டங்களாக சாலைப் பணிகள் நடைபெற்றன.
  அதில், 2 ஆம் கட்டமாக ரூ.75 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக அரை கிலோ மீட்டருக்கு சிமெண்ட் சாலையும், மீதமுள்ள 2 கிலோ மீட்டருக்கு தார் சாலையும் அமைக்கப்பட்டு, கடந்த  ஜூன் மாதம் 20 ஆம் பயன்பாட்டுக்கு வந்தது.      ஆனால், தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையானது, 15 நாள்களிலேயே பெயர்ந்து தூசியாகப் பறப்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 
     இதையடுத்து, ஒப்பந்ததாரரே பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி, வாகனங்கள் செல்லாமல் இருக்க போக்குவரத்தை தடைசெய்து விட்டாராம்.     இது மனித உரிமை மீறல் செயல் என்பதால், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com