தேனியில் 2018-19 கல்வி ஆண்டில் பிளஸ் 2, தொழிற் கல்வி, பாலிக்டெக்னிக் படிப்பு முடித்த மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச மடிக் கணினி வழங்கக்கோரி, செவ்வாய்க்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 31 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலர் நாகராஜ் தலைமையில் மாணவர்கள், இக்கோரிக்கை தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.
ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், மாணவர்கள் சார்பில் பிரதிநிதிகள் 6 பேரை மட்டும் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்ட வருவாய்த் துறை அதிகாரிகள், அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வாரத்திற்குள் மடிக்கணினி வழங்கப்பட்டு விடும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினர். ஆட்சியரை சந்திக்க மாணவர்களை அனுமதிக்கவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த மாணவர்கள், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் நாகராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நாகராஜ் உள்ளிட்ட 31 பேரை தேனி காவல் சார்பு- ஆய்வாளர் உதயக்குமார் தலைமையில் போலீஸார் கைது செய்தனர்.