வன அதிகாரியின் வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சம் மோசடி

வன அதிகாரியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் முறைகேடாக எடுக்கப்பட்டிருப்பது குறித்து செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

வன அதிகாரியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் முறைகேடாக எடுக்கப்பட்டிருப்பது குறித்து செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
 தஞ்சாவூரில் மாவட்ட உதவி வன அலுவலராக பணியாற்றி வருபவர் ஆர்.விஜயகுமார். இவர் வீடுகட்டுவதற்காக ஓய்வூதியத் தொகையில் இருந்து பணம் எடுத்து அதனை, பெரியகுளத்தில் உள்ள அரசுடைமை வங்கியின் சேமிப்பு கணக்கில் வைத்திருந்தாராம். அந்த கணக்கில் அவர் கடன் அட்டை (கிரிடிட் கார்டு ) வாங்கவில்லை. ஆனால் கடன் அட்டை வழங்கியதாகக் கூறி கடந்த ஜூலை 5 ஆம் தேதி அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 3,188.82 பிடித்தம் செய்யப்பட்டிருந்ததாம். இது குறித்து அவர் வங்கியில் புகார் செய்திருந்தார்.
  இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை அவரது வங்கிக்கணக்கில் இருந்து மேலும் ரூ. 2,07,990.53 எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக வங்கியின் கிளை மேலாளருக்கு அவர் தகவல் தெரிவித்ததையடுத்து வங்கிக் கணக்கு முடக்கிவைக்கப்பட்டது. 
 மேலும் கடன் அட்டை வழங்காத நிலையில் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணத்தை மீட்டு தரவேண்டும் என்றும் கூறி வங்கியின் கிளை மேலாளர் நாராயணனிடம் செவ்வாய்க்கிழமை  விஜயகுமார் புகார் செய்தார்.
 இது குறித்து கிளை மேலாளர் தெரிவித்ததாவது: கடன் அட்டை  இல்லாமல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது குறித்து புகார் வந்துள்ளது. இது குறித்து  வங்கியின் உயர் அதிகாரியிடம் தெரிவித்து உள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுத்து உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்படும். மேலும் இதற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com