கொடைக்கானல் அருகே வெள்ளப்பாறை பகுதியில் வெள்ளிக்கிழமை 150 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து உருண்டதில், ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் பீட்டர் (38). லாரி ஓட்டுநரான இவர், மேட்டுப்பாளையத்திலிருந்து லாரியில் தண்ணீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு கொடைக்கானலுக்கு வந்துள்ளார். வெள்ளப்பாறை அருகே வந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.
உடனே, அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பலத்த காயமடைந்திருந்த லாரி ஓட்டுநரை மீட்டனர். இதனிடையே, கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர், லாரி ஓட்டுநரை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.