போடி அருகே தந்தையை தாக்கி கொலை செய்ய முயன்றவரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்ய முயன்றபோது, அவர்களையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வடக்கு ராஜ வீதியைச் சேர்ந்தவர் ஒண்டிவீரன் (54). இவரது மகன் பூமிநாதன் (24), அப்பகுதியில் மற்றவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை ஒண்டிவீரன் கண்டித்துள்ளார்.
இதில் ஏற்பட்ட பிரச்னையில், பூமிநாதன் தனது தந்தையை கம்பால் தாக்கி கொலை செய்ய முயன்றாராம். மேலும், இதைத் தடுக்க வந்த அண்ணன் கணேசனையும் தாக்கியுள்ளார். இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இருவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஒண்டிவீரன் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் பூமிநாதனை கைது செய்ய வந்தனர்.
அப்போது, சார்பு-ஆய்வாளர் தீபக், சிறப்பு சார்பு-ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீஸாரை கண்டதும் பூமிநாதன் தப்ப முயன்றுள்ளார். அவரைப் பிடிக்க முயன்ற போலீஸாரையும், விலக்க முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரையும் மற்றும் இரு சக்கர வாகன ரோந்து காவலர் ரதின்குமாரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இது குறித்து சிறப்பு சார்பு-ஆய்வாளர் முருகேசன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் பூமிநாதன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.