தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஸ்வரர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் சுரபி நதிக் கால்வாயில் நீர் வரத்தின்றி வறண்டதால் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் முன்பாக செல்லும் சுரபி நதிக்கால்வாயில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இக்கால்வாய்க்கு முல்லைப் பெரியாற்றின் பிரதான கால்வாய் மூலமாக பக்தர்கள் நீராட தண்ணீர் திருப்பி விடுப்படுகிறது. தற்போது பருவமழை குறைவு காரணமாக முல்லைப் பெரியாற்றில் நீர் வரத்து குறைந்து விட்டது. தற்போது குடிநீர் தேவைக்காக மட்டுமே 100 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை குச்சனூர் சனீஸ்வரர் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் புனித நீராட சுரபி நதிக்கால்வாயில் நீர் வரத்து இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
முல்லைப் பெரியாற்றை நாடும் பக்தர்கள்: குச்சனூர் கோயிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் முல்லைப் பெரியாறு செல்கிறது. இந்த ஆற்றில் நீர் வரத்து இருப்பதால் பக்தர்கள் மாற்று ஏற்பாடாக முல்லைப் பெரியாற்றுக்குச் சென்று நீராடி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இதனால் குச்சனூர் - சீலையம்பட்டி இடையே செல்லும் முல்லைப் பெரியாற்றில் சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகாக காணப்பட்டது.